English version available here. Translation by Jayachandran Masilamani, co-hosted by Minnambalam (மின்னம்பலம்).
ஆசிரியர்: மெரிடித் விட்டேக்கர்
மொழிபெயர்ப்பாளர்: ஜெயசந்திரன் மாசிலாமணி, ஃப்ரீலான்ஸர்
ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களைக் கண்டித்த, ஜனநாயகமும் முதலாளித்துவமும் ஒத்துப் போகாது என்ற கருத்து கொண்டிருந்த வளர்ந்து வரும் தொழில்துறை முதலாளித்துவ வர்க்கத்தின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவருமான சார்லஸ் பாபேஜ் நவீன டிஜிட்டல் கம்ப்யூட்டிங்கிற்கான மூலப் படிவத்தின் இணை வடிவமைப்பாளர் ஆவார். பாபேஜின் வரலாறு அந்தந்தக் காலகட்டத்திற்கு தக்கவாறு துல்லியமாக வேறுபடுகிறது. "வளர்ந்து வரும் முதலாளிகள்" தொழிலாளர்களை எந்தெந்த முறையில் அடிபணியச் செய்ய முடியும் என்பது பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அவரது கோட்பாடுகள் கன்வென்ஷனல் லேபர் ஸ்காலர்ஷிப்பில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் டிஜிட்டல் கம்ப்யூட்டிங்கிற்கான ஆரம்பகட்ட பணிகளில் கணிதவியலாளர் அடா லவ்லேஸுடன் இணைந்து பங்களித்தது போன்ற பல முக்கியதத்துவம் வாய்ந்த அவரது பணிகளில் இவை இல்லை என்பது விந்தையானதாகும்.1 இந்த வரலாறுகளை ஒன்றாகப் படிக்கும் போது, தொழிலாளர்களை எவ்வாறு ஒழுக்கமானவர்களாக மாற்றலாம் என்பதற்கு பாபேஜ் வரையறுத்த முன்மாதிரியான யோசனைகளும் அவர் தனது வாழ்நாள் முழுதும் முயற்சி செய்து உருவாக்கிய கணக்கிடும் இயந்திரங்களும் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் இணையானதாக இருப்பதை நாம் தெரிந்துகொண்டோம்.
“நவீன கணினிகள் அனைத்தும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளனவோ”2 அதேபோல தொடக்கத்திலிருந்தே, எந்திரமயமாக்குவதற்கும் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்குமான கருவிகளாக இந்த இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. அதன் கட்டமைப்புகள், பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித்தின் தியரி ஆஃப் லேபர் டிவிஷனை நேரடியாக குறியாக்கம் செய்ததுடன் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களில் உள்ள முக்கியச் செயல்பாடுகளையும் எடுத்துக்கொண்டது. இயந்திரங்கள் பணியைக் கட்டுப்படுத்துவதற்கும், தானியக்கமாக்குவதற்கும், உடல் ரீதியான பணியை அல்லாமல் மன ரீதியான பனியாய் ஒழுங்குபடுத்துவதற்குமான கருவிகளாக இருந்தன.3 இந்த இயந்திரங்களை வடிவமைப்பதற்கான கோட்பாடுகளை பாபேஜும் ஸ்மித்தும் கண்டுபிடிக்கவில்லை. தோட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முதலில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களான அவை முன்மாதிரியாக இருந்தன. தொழிலாளர்களைக் கண்காணிப்பது, பணியிட எந்திரமயமாக்கள் மற்றும் பாரம்பரியமாக செய்யும் வேலைகளை "கிக் ஒர்க்" என கணினி மூலமாக மறுகட்டமைப்பது போன்ற நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் சிக்கல்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், "அடிமை முறையை ஒழிப்பு காலத்தில்" கட்டுப்படுத்தும் முறையாக கணினிமயமாக்கல் சிந்தனை வரலாற்று ரீதியாக எழுச்சி பெற்ற விதத்தை எதிரொலிக்கிறது. 1833 இல் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக மேற்கிந்திய அடிமைத்தனத்தை ஒழித்தது, மேலும் அடிமை முறை ஒழிப்பு மீதான விவாதம் பற்றி பாபேஜ் நன்கு அறிந்திருந்தார். அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பினத்தொழிலாளர்களுக்கு மாற்று வழிகளைத் தேடுகையில் உயரடுக்கை பிரிட்டிஷாரை உலுக்கிய கேள்விகளையும் அவர் அறிந்திருந்தார் - குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பராமரிப்பதற்குத் தேவையான வேகத்திற்கு, தொழில்மயமாக்கலுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சி செய்யும் வெள்ளை தொழில்துறை தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதற்கு அவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்வி பிரிட்டிஷாரை உலுக்கியது. தாக்கத்தை ஏற்படுத்திய பாபேஜின் தொழிலாளர் கோட்பாடுகள், அவரது இயந்திரங்கள் ஆகிய இரண்டையும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முயற்சிகளாகப் புரிந்துகொள்ளலாம்— அவை தெரிந்தோ தெரியாமலோ, தோட்டத்தில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களுக்கு புத்துயிர் அளித்தன.
தொழில்துறை தொழிலாளர் கட்டுப்பாட்டை தோட்டத்தில் கண்டறிதல்
சட்டம் மற்றும் தொழிலாளர் கொள்கையில், சுதந்திரம் என்ற கருத்து பெரும்பாலும் ஒப்பந்தத்தில் வேரூன்றியிருக்கிறது: வருவதற்கும் போவதற்கும், விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மீறுவதற்கும் மக்களுக்கான அதிகாரம் (அதிகாரமின்மை) சட்டம் மற்றும் உச்சபட்சமாக அரச வன்முறையின் துணையோடு எழுத்துப் பூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.4 இதன்படி, தொழிலாளர்களும் முதலாளிகளும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஏற்கவும் அல்லது மறுக்கவும் சுதந்திரமுள்ளவர்கள் என்ற வகையில் ஒப்பந்தத்தை சமமாக அணுக வேண்டும் எனப் புரிந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும், பெறப்பட்ட இந்தச் சுதந்திரமானது உற்பத்தித் திறனை இயன்றளவிற்குப் பிழிந்தெடுக்கும் முதலாளிகளின் இலக்குகளை அடைவதற்காக வடிவமைக்கப்பட்ட தொழிலாளர் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களால் அமலாக்கப்படும் அதிகார கட்டமைப்பு பேதங்களால் நடைமுறையில் குறைக்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் தொழிலாளர்களின் உடல்களையும் இயக்கங்களையும் மனப் பழக்கங்களையும் கட்டுப்படுத்துகின்றன. மேலும் அவற்றைச் செயல்படுத்துவது "சுதந்திரமான" என்று சொல்லக்கூடிய தொழிலாளர் பரிபாலனைகளை இயலச் செய்யும் அதேவேளையில் தொழிலாளர்களின் முகமையையும் பணியிடத்தில் குரல் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. அதற்காக, தொழிலாளர்கள் அத்தகைய நிபந்தனைகளை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்ததற்கான ஆதாரமாக ஒப்பந்தத்தைக் காட்டுகிறது.
தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான தொழில்துறை முறைகள் தோட்டங்களில் முன்னரே தோன்றின. இது அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் உழைப்பை அதிகரிப்பதற்கு பயன்பட்டது. அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல் தங்களை அடிமைப்படுத்தியவர்களுக்கு இலாபம் பெற்றுத்தருவதற்கு எந்த விதமான உந்துதலும் இல்லாமல் இருந்தார்கள். தொழில்துறை மற்றும் தோட்டத் தொழிலாளர் கட்டுப்பாட்டுக்கு இடையிலான தொடர்பு அடிப்படையானதாக இருக்கும் அதேவேளையில், இன வெறியில் வன்முறையைக் கட்டவிழ்த்து தொழிலாளர்களைக் கட்டுப்படுத்திய தோட்ட அடிமை முறைகளுக்கும் அதனை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்துறை தொழிலாளர் செயல்முறைகளுக்கும் இடையில் சாதாரண ஒற்றுமைகள் இல்லை என்பதை அறிந்திகொள்வது அவசியமானதாகும்.5 ஆதிக்க மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்ட தோட்டத்தில் தோட்ட மேலாண்மை கறுப்பின மக்களை மனிதர்களாகப் பார்க்காமல் பண்டங்களாகப் பார்ப்பதில் உறுதியுடன் இருந்தது. அத்துடன், வெள்ளைத் தொழிலாளர்கள் "சுதந்திரமானவர்கள்" என்று வகைப்படுத்தக் கூடியதற்கு மாறாக தோட்டத்தில் நிலவிய கொத்தடிமை நிலைமைகள் "அடிமைகள்" என்ற வகையை வரையறுத்தது.
அடிமைமுறையில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டு முறைகளை ஒப்பந்தப்படி நித்வகிக்கப்படும் "சுதந்திரமான" வெள்ளைத் தொழிலாளர் முறைக்கு மாற்றுவதற்கு தோட்ட அடிமை முறை மற்றும் தொழில்துறை தொழிற்சாலைகள் கட்டமைப்புக்கு இடையிலான ஒற்றுமைகள் உதவியாக இருந்தது. நவீனமயமான திறன்மிக்க தொழிற்சாலைகள் போல பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பிரிட்டிஷ் தோட்டங்களில் 'கடுமையாக' உழைக்கும் சூழல் இல்லை. மாறாக, தோட்டங்கள் "நவீன தொழில்துறை நிறுவனங்கள்" ஆகும்.6 அதன் உரிமையாளர்களும் மேற்பார்வையாளர்களும் பல 'நவீன' தொழில்துறை மேலாண்மையையும் தொழிலாளர் ஒழுங்குமுறைகளையும் தொழிற்சாலைகளில் அதே அளவிற்கு கடுமையாக செயல்படுத்தப்படுவதற்கு முன்பே உருவாக்கியுள்ளனர்.7 "புதிய தொழில்துறை ஒழுங்குமுறையின் சாரங்கள் பெரும்பாலானவை … தோட்டத்து அடிமை முறைகள் பலவற்றுடன் ஒத்துப்போவதாக இருந்தன. மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, கட்டுக்கோப்பான பிரிவுகள், தொழிலாளர் பிரிவு, கண்டிப்பாகக் கட்டுப்படுத்தப்பட்ட வேலை வேகம், எழுதப்பட்ட விதிகளும் ஒழுங்குமுறைகளும் அனைத்தும் ஒவ்வொரு தோட்டக்காரராலும் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.”8 பிரிட்டிஷ் தொழிலதிபர்கள் தெரிந்தே அடிமைமுறையிலிருந்த நடைமுறைகளை எடுத்துக்கொண்டார்கள். தோட்ட நிர்வாக வழிகாட்டிகள் பிரிட்டிஷ் முதலாளிகளிடையே பகிரப்படுவது வாடிக்கையாக இருந்தது, மேலும் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பிரிட்டனில் முன்வடிவமைக்கப்பட்ட கணக்கியல் புத்தகங்கள், வார்ப்புருக்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கும் தொழில் பரவலாகக் இருந்தது, இது பெரும்பாலும் தொழில்துறை மேலாண்மை பற்றிய இலக்கியங்களுடன் இணைந்திருந்தன.9
இந்தத் தொடர்புகள் தெளிவாக இருந்தபோதிலும், வேலை மற்றும் தொழிலாளர்களின் வரலாறும் இவற்றுடன் மேலாண்மை, வணிகம் ஆகியவை பற்றிய புலமையும் நிர்வாகம் மற்றும் தொழிலாளர் செயல்முறைகளின் நவீன வடிவங்களை வடிவமைப்பதில் அடிமை முறையின் முக்கியத்துவத்தை முழுவதுமாக அழிக்கிறது. தொழில்துறை தொழிற்சாலையின் தொடர்புடன் தோட்டத்தை ஈடுபடுத்த மறுப்பதன் காரணமாக, வேலையும் தொழில்மயமாக்கலின் வரலாற்றும் இன ஆதிக்கத்தின் நடைமுறைகளிலிருந்து பிரிக்கப்பட்டதாக ஒரு தோற்றத்தை உண்டாக்குகிறது. கதையில் உள்ள இந்த உத்திப் போதாமைகள் சில வகையான கூலித் தொழில்களைக் கட்டுப்படுத்துவதற்கு தோட்டத் தொழில்நுட்பங்களை அணிதிரட்டும் அதே வேளையில் "சுதந்திரமானவை" என்று வகைப்படுத்தும் திட்டத்திற்கு பயனளிக்கிறது. தொழிலாளர் வரலாறுகளும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் தொழில்நுட்பங்களும் தோட்டங்களில் தோன்றியதிலிருந்து துண்டிக்கப்படுவது, வேலையின் தன்மையையும் இனத்துடனான அதன் தொடர்பையும் சுற்றியுள்ள சமகால இக்கட்டான சூழ்நிலைகளை அடையாளம் காணும் நமது திறனைக் குறைக்கிறது. அப்படி மாற்றியமைத்ததால், பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்துறை இயந்திரங்களின் வளர்ச்சி தான் தொழில் மயமாக்கலுக்குக் காரணம் என்பதாகத் திரித்துக் காட்டுகிறது. முன்னர் தொழில்மயமாக்கலுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி வலுவாக உதவிய போது (இதற்கு பாபேஜ் கணிசமான பங்களிப்பை வழங்கினார்), அத்தகைய இயந்திரங்கள் தவிர்க்க முடியாமல் தொழிற்சாலைக்கு முந்தைய தோட்டத் தொழிலாளர் ஒழுக்கத்தின் தர்க்கங்களுடன் பிணைக்கப்பட்டன. இனத்தையும் உழைப்பையும் புறக்கணிப்பதன் மூலம், திரிக்கப்பட்ட இந்த வரலாறுகள் தொழிற்சாலை மற்றும் அதன் "சுதந்திரமான" தொழிலாளர் முறைகள் விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக உருவானதாகவும், ஒழுக்கத்திற்கான தோட்ட முறைகளுடன் அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சித்தரிக்கின்றன.10
பாபேஜும் தோட்ட மேலாண்மையும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாபேஜ் வகுத்த தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகள் தொழில்துறை தொழிற்சாலை நிர்வாகத்தை வடிவமைப்பதற்கும் முந்நாளைய முறைகளை பிற்காலத்தில் ஃபிரடெரிக் வின்ஸ்லோ டெய்லரால் "அறிவியல் மேலாண்மை" என்ற பதத்தின் கீழ் குறிப்பிடுவதற்கும் உதவியது. பாபேஜ், தனது புகழ்பெற்ற படைப்பான ஆன் தி எகனாமி ஆஃப் மெஷினரி அண்ட் மேனுஃபேக்ச்சர்ஸ் இல் தொழிலாளர் ஒழுக்கம் குறித்த தனது கருத்துக்களை ஆவணப்படுத்தினார். இது மேற்கிந்திய அடிமைமுறையை ஒழிப்பதற்கு பிரிட்டன் முடிவெடுப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆடம் ஸ்மித்தின் கூற்றுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அவரது படைப்பு, தோட்டத்தில் பின்பற்றப்பட்ட தொழிலாளர் பிரிவு, கண்காணிப்பு, உற்பத்தியைப் பெருக்கிய முறைகளை புகழ்ந்து பேசுகிறது.
"அடிமை வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும்" நிர்வகித்துக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களைப் பிரித்த, அவர்களின் நடைமுறைகளையும் இயக்கங்களையும் வரையறுத்த, அவர்களின் அசைவுகளை திருத்திய அதிகாரத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் மீதான அதிகாரம் செயல்படுத்தப்பட்டது என்பதை சிமோன் பிரவுன் டார்க் மேட்டர்ஸ்: ஆன் தி சர்வெய்லன்ஸ் ஆஃப் ப்ளாக்நஸ் இல் சுட்டிக் காட்டுகிறார்.11 அவரது படைப்பு, தோட்டங்களில் வாழ்க்கை மற்றும் உழைப்பின் கடுமையான பிரிவும் அளவீடும் ஒன்றன் மீது ஒன்று செலுத்தும் தாக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது, மேலும் இத்தகைய பிரிவுகள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களை மேற்பார்வையாளர்களும் மேலாளர்களும் கண்காணிப்பதற்கு எப்படி உதவியது என்பதையும் விவரிக்கிறது.12 களத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ உற்பத்தி குறைந்தால், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் செயல்முறையின் மீது ஒரு நிலையான கண்ணோட்டத்தை வரையறுத்து மேற்பார்வை செய்வதன் மூலம் பயனடையும் உரிமையாளர்களுக்கு வேலையைச் செய்பவர்களிடமிருந்து அதிகாரம் மாறும். அத்தகைய கண்ணோட்டம் தானாகவே தோன்றாது. மாறாக, இது பதிவுகள், அளவீடுகள், தரமான மதிப்பீடுகள் ஆகியவை மூலம் ஏற்படுகிறது - மேலும் "பதிவு செய்வது" என்பது "கண்காணிப்பு" என்பதற்கான பொருளாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலையையும் தொழிலாளர்களையும் கண்காணித்தல் மற்றும் அளவீடு செய்தல் என்பது தோட்டத்தில் பத்திரப்படுத்தும் பதிவுகளை அதிகரிப்பது முதலாவதும் விவாதிற்குரிய மிக முக்கியமான படியாகும். தரவுகளும் தகவலும் தேவைப்படும் இந்த பதிவுகள், வேலையையும் தொழிலாளர்களையும் இயன்றவரை கண்காணிக்கக்கூடியதாகவும் அளவிடக்கூடியதாகவும் மாற்றும் சேவையில், உழைப்பு எவ்வாறு பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது என்பதை வடிவமைத்தது.
தொழிலாளர் கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவை பாபேஜின் கோட்பாடுகளின் முக்கியமான அம்சமாகும். பாபேஜின் படைப்பில் உள்ள ஒரு அத்தியாயம், தொழிற்சாலை செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்க விரும்புபவர்கள் என்னென்ன "தரவை" சேகரிக்க வேண்டும் என்று வாசகர்களுக்கு அறிவுறுத்துகிறது. பாபேஜ் விரும்பிய தரவுகளுக்கும் தோட்ட உரிமையாளர்கள், மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் தோட்ட தொழிலாளர் நடைமுறைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்த தரவு மற்றும் அளவீடுகளுக்கும் இடையே தெளிவான ஒற்றுமைகள் உள்ளன. ஒரு பணியை முடிக்கத் தேவையான எத்தனை தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள், அவர்களின் வேகம், ஒரு நாளுக்கு ஒரு வேலைக்கு ஒரு தொழிலாளியின் உற்பத்தி ஆகியவற்றை கண்காணிப்பது, வேலையை முடிக்கத் தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள், கொடுக்கப்பட்ட முயற்சியை நிறைவேற்றத் தேவையான திறன்கள் ஆகியவற்றைப் பதிவு செய்ய இரண்டிலும் அறிவுறுத்தப்படுகிறது.13 பாபேஜிற்கும் தோட்ட மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கும் தொழிலாளர் ஒப்பந்தங்களின் வடிவமைப்பிலும் மறுவடிவமைப்பிலும் சேர்க்கப்பட்ட இத்தகைய கண்காணிப்புடன், குறிப்பிடும்படியான வன்முறையும் ஒழுக்கமும் லாபத்தையும் உற்பத்தித்திறனையும் பெருக்குவதற்கு உதவியது.
பாபேஜ், தரவு சேகரிப்பை (கண்காணிப்பு எனவும் அழைக்கப்படும்) வெளிப்படையாக அறிவுறுத்தியதற்கும் அப்பால், தொழிலாளர்களைப் பிரிப்பதும் தொழிலாளர் செயல்முறையைப் பிரிப்பதுமே கண்காணிப்பை அதிகரிக்கும் என்பதை அவரது படைப்பில் சுட்டிக்காட்டுகிறார். முதலாளிகளும் மேற்பார்வையாளர்களும் கொடுக்கப்பட்ட வேலையின் ஒவ்வொரு பகுதியையும் முதலில் வரையறுத்துக் குறிப்பிட்டு முறையாக அளவிடக்கூடிய அமைப்பை உருவாக்குவது தொழிலாளர் பிரிவுக்கு அவசியமானதாகும். இது தொழிலாளர்களை முதன்மையாக இணக்கத்துடன் வேலை செய்ய வைக்க உதவும்.14 இது வேலையை (மற்றும் அதைச் செய்யும் நபர்களை) மிகவும் எளிதாகக் காணக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும், கட்டுப்படுத்தக்கூடியதாகவும் மாற்றும். முன்கூட்டியே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணியும் அதன் மீதான எதிர்பார்ப்பும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவுகோல் அல்லது எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் அளவிடப்படலாம். தொழிலாளர் செயல்முறையின் பிரிவும் நிபந்தனைகளும் கண்காணித்தவற்றின் அடிப்படையில் "மேம்படுத்துவதை" இயலச் செய்கிறது. இது, தொழிலாளர்களை அளவிடக்கூடியவர்களாகவும் மாற்றக்கூடியவர்களாகவும் மேற்சொன்னவற்றிலிருந்து சீரமைக்கவும் மறுசீரமைக்கவும் இணக்கமானவர்களாவும் பார்க்கும் தோட்ட தர்க்கங்களை கருவாகக் கொண்டுள்ள நிர்வாக மேற்பார்வை மற்றும் ஒழுக்கத்தின் பின்னூட்ட வளையத்தை உருவாக்குகிறது. நடைமுறையில் இத்தகைய "சீரமைப்புகள்" செயல்படுவதை நிச்சயமாக எந்த இனம் என்பதே தீர்மானித்தது. இது, அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் விஷயத்தில் அடிபணிதலையும் வன்முறையைப் பயன்படுத்துவதையும் நியாயப்படுத்தி இயல்பாக்கிய அதே நேரத்தில் "சுதந்திரமான" வெள்ளைத் தொழிலாளர்களுக்கு இத்தகைய கொடூரத்தை குறைத்தது.
பதிவுசெய்தல், கண்காணிப்பு ஆகிய இந்த நடைமுறைகள் சில நூறு அடிகள் அல்லது ஆயிரக்கணக்கான மைல்கள் இடைவெளியில் இருந்தாலும், "தூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகம்" (அல்லது, "அதிகார மட்டத்திலிருந்து கட்டுப்பாடு") செய்வதையும் இயலச் செய்கிறது. மக்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் அளவிடக்கூடிய பண்டங்களாகப் குறிப்பிடுவதன் மூலம், கட்டுப்பாட்டைச் செலுத்த விரும்புவோர், தாங்கள் எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகள் உண்மையல்ல என மறுப்பதற்கான அதிகாரத்தையும் தக்கவைத்துள்ளார்கள். தோட்ட அடிமை முறையைப் பொறுத்தவரை, தூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகம் செய்வது, வன்முறையையும் கொடூரங்களையும் மறுப்பதற்கு உரிமையாளர்களுக்கு சில வழிவகைகளை வழங்கியது, தோட்டம் அதன் இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு இயந்திரகதியாக இயங்குவதாக ஒரு அருவத்தை உருவாக்குகிறது. நிக்கோலஸ்ஃபியோரி சர்க்கரைத் தோட்டங்களின் இயக்கத்திற்கான சமகால கையேட்டை மேற்கோள் காட்டுகிறார், இது இயந்திரகதியான கட்டுப்பாட்டு அருவத்தின் கற்பனைகளைப் பற்றி பேசுகிறது: "நன்கு கட்டமைக்கப்பட்ட இயந்திரம், ஆற்றல் மற்றும் முக்கியமான திருகு சூழல்கள் அல்லது முதன்மை பாகங்கள் சரியாக இருப்பதைச் சார்ந்திருப்பதைப் போல [தோட்டத்தின்] முழுமையான வெற்றி முக்கியமாக இதில் அடங்கியுள்ளது."
தொழிற்சாலைகள், தோட்டங்கள் ஆகிய இரண்டிலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மக்களின் வாழ்க்கையைத் தீர்மானித்ததும், தொழிலாளர் செயல்முறையை கட்டமைத்ததுமான மதிப்பீட்டு முறைகளைத் தெரிவித்தன. அடிமை முறைச் சூழலில், கடத்தி அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் விற்பனைக்காகவும் கடனாக அனுப்புவதற்காகவும், ஒரு நபரின் உற்பத்தித் திறனைத் தெரிந்துகொண்டு அதன் மதிப்பை அவர்களின் முக்கியமான அளவுகோலாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டனர், மதிப்பிடப்பட்டனர் மற்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்கள், "அவர்கள் செய்யக்கூடிய வேலையின் அளவை மதிப்பிடுவதற்கான முதன்மை அளவுகோலுடன்", மதிப்பிடப்பட்ட அவர்களின் உற்பத்தித்திறன், அவர்களின் உடல் தோற்றம், அவர்களின் கருவுறும் ஆரோக்கியம், பிற பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அடிமைத்தனத்திலிருந்து இலாபம் பெறும் கடத்தல்காரர்கள், தோட்ட மேலாளர்கள், பிறரால் மதிப்பிடப்பட்டனர்.15
தொழிலாளர்களை மதிப்பிடுவதற்கான வழிமுறைகளையும் பாபேஜ் முன்மொழிந்தார். தொழிலாளர் அறிஞர் ஹாரி பிரேவர்மேன் "பாபேஜ் கொள்கை" என்று குறிப்பிட்டதில், ஒரு சிக்கலான பணியை சிறு சிறு கூறுகளாகப் பிரித்து அவற்றை "குறைந்த திறன் தேவைப்படுபவை" என்று குறிப்பிடுவது, அந்தக் கூறுகளில் ஒவ்வொரு பகுதியையும் செய்து முடிப்பவருக்கு குறைவாக ஊதியம் வழங்குவதை நியாயப்படுத்த முடியும் என்பதை பாபேஜ் விவரித்திருந்தார்.16 பாபேஜ் கொள்கையின் மையமாக வேலை மற்றும் தொழிலாளியின் மதிப்பை வரையறுப்பதற்கும், தொழிலாளர் செயல்முறையின் வரையெல்லையும் முறையையும் கட்டுப்படுத்துவதன் மூலம் அவ்வாறு செய்வதற்கும், மறைமுகமான உரிமை முதலாளிக்கு உள்ளது. பாபேஜைப் பொறுத்தவரையில் மதிப்பீடு என்பது "திறனை" வகைப்படுத்துவதுடன் தொடர்புடையதாகும், தொழிலாளர் பிரிவு மூலம் முதலாளியால் நிர்ணயிக்கப்பட்ட வரையெல்லையைக் கொண்டு செய்து முடிக்கப்பட்ட பணியின் வரையெல்லையின் அடிப்படையில் திறன் மதிப்பிடப்பட்டது.17 "திறன்" என்பதை வரையறுக்கும் முயற்சியில் வெளிப்படும் அதற்கு இணையான ஒரு கருத்திற்கு பாபேஜ் தன் கவனத்தைத் திருப்புகிறார்: ஒரு தொழிலாளி தனது வேலைக்குக் கோரக்கூடிய ஊதியத்தின் அளவைக் கொண்டு ஒரு தொழிலாளியின் "திறன்" தீர்மானிக்கப்படுகிறது: திறன் "அந்தத் தொகைகளால் அளவிடப்படலாம்."18 எனவே, ஒரு முதலாளி வேலைக்கான ஊதியமாகக் கொடுக்க ஒப்புக்கொள்ளும் தொகைக் கொண்டு திறமையைக் கணக்கிடலாம். இந்த சுற்றிவளைத்த வரையறை மூலம், தோட்டத்தில் மதிப்பீடு செய்தது போல திறமை என்பது ஒரு நபர் எவ்வளவு லாபம் ஈட்ட முடியும் என்பதற்கான குறியீடுதான் என்பதை இறுதியாக பாபேஜ் ஒப்புக்கொள்கிறார். இது முதலாளியின் அதிகாரத்தையும் மதிப்பீட்டையும் தான் பிரதிபலிக்கிறதே அன்றி வேலையைச் செய்பவர் அல்லது அவர்கள் செய்யும் வேலையின் தன்மையை அல்ல.
"திறன்" என்பதை பாபேஜ் எவ்வாறு பயன்படுத்தப்படுத்துகிறார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு, வளர்ந்து வரும் தொழில்துறை தொழிலாளர் காலகட்டத்தின் உச்சத்தில் "சுதந்திரம்" பற்றிய புரிதலை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும், அப்போது பாபேஜ், ஒப்பந்தத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகத் தெரிந்த சுதந்திரத்துடன் இணைந்து "திறன்" என்பதைத் தீர்மானிக்கவும் புரிந்துகொள்ளவும் உழைத்தார். கத்தாரில் புலம்பெயர்ந்தோரின் வேலையிலும் திறனிலும் உள்ள அரசியலைப் பற்றிய தனது ஆய்வில், நடாஷா இஸ்கந்தர், திறன் என்ற கருத்து "சுதந்திரம்" என்ற கருத்துடன் இறுக்கமாக இணைக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகிறார் - தொழிலாளர் பிரிவுகளில் மறைமுகமாக "திறமையின்மையின் பண்பை அடிப்படையாகக் கொண்டு அதன் ஒரு பிரதிபலிப்பாகவோ அல்லது செயல்பாடாகவோ அடிமை முறை மறுகட்டமைக்கப்படும்".19 "திறமையற்றவர்களுக்கான" பாதுகாப்பில்லாத ஆதிக்க நிலைமைகளை நியாயப்படுத்தும் "தகுதியின்" படிநிலையை உருவாக்கி, கொத்தடிமை நிலைமைகளை உருவாக்கி இயல்பாக்குவதற்கு திறமை எனும் பதமும் எது திறமை எது திறமையின்மை என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக முதலாளிகள் கூறுவதும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இஸ்கந்தர் விளக்குகிறார்.20 "சுதந்திரமான" வேலைச் சூழலில், "திறன்" என்பது ஏதோ (வெள்ளை) தொழிலாளர்களுக்கு உரித்தானது போலவும் ஒரு தொழிலாளி முதலாளி விரும்பும் இலாபத்தில் இருந்து பெறக்கூடிய ஊதியத்தின் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது-கோட்பாட்டளவில் அந்தத் தொகையை மாற்றித் தருமாறு அவர்கள் பேரம் பேசலாம் அல்லது ஏற்க மறுக்கலாம். தோட்டத்தில், அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் திறமையானவர்களாகக் கருதப்படவில்லை. அவர்கள் திறமையைக் கொண்டிருக்க இயலாதவர்களாகக் கூறப்பட்டனர், மேலும் அவர்கள் வெளிப்படுத்திய எந்தவொரு திறமையும் உடல் ரீதியான வேறுபாடுகள் காரணம் என்றாலும் அவர்களைத் தாழ்ந்தவர்களாகக் குறிப்பிடுகிறார்கள் - விலங்கு திறன் கொண்டவர்கள் அவர்களிடம் மனித புத்திசாலித்தனம் இல்லை என்றார்கள். இனப் பாகுபாட்டால் பிரிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் திறன் படைத்தவர்களாகக் கருதப்பட்ட அதே வேளையில் சுதந்திரம் இல்லாத நிலைக்குத் தள்ளுவதற்கு திறமையில்லாதே காரணம் என்பது கருப்பாக இருப்பதனால் ஏற்பட்ட நிலையானது.21
பாபேஜ் பயன்படுத்தும் திறன், தோட்டத் தொழில்நுட்பங்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தாலும், "சுதந்திரமான" தொழிலாளர் வகையை உருவாக்கும் திட்டத்தில் உள்ள ஒப்பந்தத்துடன் இணைந்து செயல்படுகிறது. "சுதந்திரமான" வேலை என்ற கருத்துருவிற்குப் பின்னால் ஒப்பந்தமும் சுதந்திரம் பற்றிய அதன் கருத்துக்கள் மறைமுகமாக உள்ளதைப் போலவே, திறன் பற்றிய கருத்தாக்கமும் உள்ளது. பாபேஜின் கட்டமைப்பில், (வெள்ளை) தொழில்துறைத் தொழிலாளர்கள் (சில) திறன்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது, ஆகையினால் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களுக்கானதாகக் கருதப்படும் சுதந்திரமற்ற வகைக்கு வெளியே இருப்பார்கள். தொழிலாளர்களின் "வேலைக்கான திறனைக் குறைக்கும்" திட்டத்தில் தொழிலாளர் பிரிவை அவர் பயன்படுத்தியிருப்பது, தொழிலாளர்களின் சுதந்திரத்தை (திறன்) குறைக்கும் முயற்சியே அன்றி முற்றிலும் இல்லாமல் செய்வதற்கு அல்ல என்று புரிந்துகொள்ளலாம். "சுதந்திரமான" தொழிலாளர்களிடமிருந்து இயன்றவரை "திறமையை" குறைப்பதற்காகத் தொழிலாளர் செயல்முறைகளை கட்டமைக்கும் உரிமையுடன் "திறன்" என்பதை வரையறுக்கும் உரிமையையும் முதலாளிகளுக்குக் உறுதியளித்ததன் மூலம் பாபேஜ் இதை நிறைவேற்றினார். பாபேஜ் வகுத்தக் கோட்பாடான "வேலைக்கான திறனைக் குறைக்கும்" இது போன்ற நடைமுறைகள், சுதந்திரமாகக் கருதப்படும் ஒன்றைப் பேணுகையில், கட்டுப்பாட்டினால் பெரும் பயன்பெறவும் அதன் விளைவால் ஏற்படும் தீங்குகளையும் நியாயப்படுத்தவும் உதவுகின்றன. "திறன்" அடிப்படையில் கூலியையும் பணிச் சூழலையும் அமைப்பது ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது (தகுதியைப் போன்றது), அதில் ஒரு தொழிலாளியின் ஊதியம், பணிச் சூழல்கள், (இல்லாத) நிறுவனம் ஆகியவை தகுதியானவை என்று குறிப்பிடப்படும் (இதற்கு அவர்கள் தகுதி பெற்றவர்கள்) அதே வேளையில் தொழிலாளர்கள் தன்னார்வமாக உழைக்கும் தன்மையையும் அவர்களின் நிறுவனங்கள் அதைச் செயல்படுத்துவதையும் (அவர்கள் இதைத் தேர்ந்தெடுத்தனர்) ஒப்பந்தம் உறுதி செய்கிறது. . இது இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருப்பது கறுப்பின சுதந்திரமின்மையின் அச்சுறுத்தலாகும், இதற்கு நேர்மாறாக எப்போதும் "சுதந்திரமானது" என்று கருதப்படும் தொழில்துறை வெள்ளையினத் தொழிலாளருடன் ஒப்பிடும் பொருளாக விளங்குகின்றது.
அடிமை முறை, பேரரசு மற்றும் தொழிலாளர் கேள்வி
பாபேஜைப் பொறுத்தவரை, ஆன் தி எகானமி ஆஃப் மெஷினரி அண்டு மனுஃபாக்சர்ஸ் என்ற நூலில் அவர் வகுத்துள்ள தொழிலாளர் பிரிவு மற்றும் கண்காணிப்பு ஒழுங்குமுறை நடவடிக்கை வருத்தப்பட வேண்டிய ஒன்றல்ல. வளர்ந்து வரும் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் நிலையை அடைவதற்காக அவர் நிர்ணயிக்கும் இலக்குகள் கலப்படமற்றவையாகும். இவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் எதுவும் அகற்றப்படவேண்டிய தடையாகும். இதில், அவர் தனது சக பிரிட்டிஷ் உயரடுக்கினர் பக்கமிருந்தார்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், உள்நாட்டில் தொழிலாளர் கொந்தளிப்பும் மேற்கிந்தியத் தீவுகளில் பிரிட்டிஷ் அடிமை முறை ஒழிப்பு நிலுவையிலும் இருக்கும் சூழலில் தொழிலாளர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்ற கேள்வி அழுத்திக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் பேரரசின் எதிர்காலம், அதன் பொருளாதார நிலையை நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவையான உற்பத்தித் திறனைத் தக்கவைத்துக் கொள்ளும்பதிலை நம்பியிருந்தது.
பாபேஜ் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை, தொழில்துறையையும் முதலாளித்துவத்தையும் ஆதரிப்பது ஒரு அறிவார்ந்த நிலைப்பாடல்ல என்பதை இங்கே நினைவில் கொள்வதற்கு இது உதவுகிறது. 1830 ஆம் ஆண்டில், ஆன் தி எகானமி ஆஃப் மெஷினரி அண்டு மனுஃபாக்சர்ஸ் நூலை பாபேஜ் முடிக்குந்தருவாயில், ஸ்விங் கிளர்ச்சி என்ற அடையாளத்துடன் ஒரு புதிய தீவிரமான எதிர்ப்பு அலை நாடு முழுவதும் பரவியது. பழைய தொழிலாளர் முறைகள் தொழில்துறையில் ஊடுறுவுவதை எதிர்த்து வெள்ளை பிரிட்டிஷ் தொழிலாளர்கள் விவசாய உபகரணங்களை எரித்தார்கள், தொழில்துறை இயந்திரங்களை அழித்தார்கள், தொழில்மயமாக்கல் குறித்த காட்டமான விமர்சனங்களை விநியோகித்தார்கள்.22அத்தகையக் கிளர்ச்சி வெற்றிபெறுவதற்கான சாத்தியம் இல்லாமலும் இல்லை: மன்னர் ஆட்சியைக் கவிழ்த்த பிரெஞ்சுப் புரட்சியின் நினைவு பசுமையாகவே இருந்தது, அது கிளர்ச்சியாளர்களைத் தூண்டுவதாகவும், அதே போன்றதொரு புரட்சி மீண்டும் வெடிக்கலாம் என்று அஞ்சிய பிரிட்டிஷ் உயரடுக்கினருக்கு எச்சரிக்கை மணியாகவும் இருந்தது.
பிரிட்டிஷ் தொழில்துறை மட்டுமே கிளர்ச்சி அலைவீசும் ஒரே துறை அல்ல. பிரிட்டிஷ் அடிமை வர்த்தகம் 1807 இல் தடைசெய்யப்பட்டது, பிரிட்டிஷ் மேற்கிந்திய அடிமை முறை அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட போது, 1807 க்கும் 1833 க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் பிரிட்டனில் துயரமான விவாதம் நடக்கும் காலமாகும், அதனுடன் பிரிட்டிஷ் தோட்டங்களில் வாடிக்கையாக கிளர்ச்சி எழுவதும் சேர்ந்து கொண்டது. இதே காலகட்டத்தில் தான் பாபேஜ் தனது இயந்திரங்களையும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கோட்பாடுகளையும் தீவிரமாக உருவாக்கிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியான "கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்பின் அலைகள்" தோட்ட அடிமை முறையின் விலையை உயர்த்தியதுடன் "மூலதனக் கணக்கீட்டை 'சுதந்திரமான பணி' என்ற பக்கத்திற்கு மாற்ற உதவியது." டிசம்பர் 1831 வாக்கில் இது பயனளிக்கத் தொடங்கியது.23ஜமைக்காவில், பாப்டிஸ்ட் மிஷனரிகளின் உதவியுடன், கிறிஸ்துமஸ் புரட்சி என அறியப்பட்ட ஆயுதமேந்திய பொது வேலைநிறுத்தத்தில் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள் ஈடுபட்டார்கள். வெள்ளையின மேலாளர்களையும் மேற்பார்வையாளர்களையும் அழித்துவிட்டு தோட்டங்களை கைப்பற்றுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. தாமஸ் சி. ஹோல்ட், ஸ்விங் மற்றும் ஜமைக்கா எழுச்சிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை வலியுறுத்துகிறார்: "இங்கிலாந்தின் தெற்கு மாவட்டங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல் போர்கள் ஜமைக்காவின் மேற்கு மாகாணங்களில் எரிப்பட்ட சர்க்கரை ஆலைகளைப் பிரதிபலித்தன," இது பிரிட்டிஷ் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இடைவிடாது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.24மேலும், பிரிட்டனில் கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு பிரெஞ்சுப் புரட்சி முன்னுதாரணமாக இருந்ததைப் போல, ஜமைக்காவில் அடிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் நோக்கங்களுக்கு எந்த முன்னுதாரானமும் தேவையிருக்கவில்லை: பிரெஞ்சு அடிமை முறையை ஒழித்துத் தூக்கியெறிந்த ஹைட்டிய புரட்சி நினைவு பலருக்கும் பசுமையாக இருந்தது.
பிரிட்டன் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடையே தோன்றிய தொழிலாளர் கிளர்ச்சிகள் ஒரே மாதிரியாக இல்லை என்றாலும் பொதுவான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், இரண்டும் சேர்ந்து பிரிட்டிஷ் உயரடுக்கு மக்கள் மீது ஒரே மாதிரியான ஒரு அழுத்தத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து சில கேள்விகளும் கவலைகளும் எழுகின்றன. பிரிட்டிஷ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, வெளிநாட்டில் அடிமை முறை ஒழிப்பிற்கும் உள்நாட்டில் வளர்ந்து வரும் தொழில்மயமாக்கலுக்கும் "வேராக இருப்பது தொழிலாளர் பிரச்சனையாகும்."25அக்காலத்தில் "சுதந்திரமான" தொழில்துறை பணி என்பது பிரிட்டிஷார் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்றாக இருந்த போதும் அதற்கான சாத்தியக்கூறு முடிவாகமல் இருந்தது. பிரிட்டன் தொழில்துறையில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவையான அளவிற்கு தரநிலைகளுடன் உழைப்பதற்குத் திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் நம்பிக்கையில், பிரிட்டிஷ் கொள்கை வகுப்பாளர்கள் உழைக்கும் மக்களை அமைதிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உதவக்கூடிய தொழிலாளர் ஒழுக்கமுறை மாதிரிகளைத் தேடினார்கள்.
இந்தக் கேள்விகளும் விவாதங்களும் பாபேஜிற்கு ஒன்றும் புதிதல்ல. பிரிட்டிஷ் தொழிலாளர் கிளர்ச்சிகள் பற்றிய அவரது கருத்துகள் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கும் அதே நேரத்தில் (வன்முறை சிறப்புச் சலுகை போல கொண்டாடப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்தார்), அடிமை முறை மற்றும் இனவாதத்துடனான அவரது ஈடுபாடு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவது, பிரிட்டனை உலுக்கிய தொழிலாளர்களின் சமகால கேள்விகளுடன் அவரது பணியைப் பொருத்திப் பார்க்க உதவுகிறது. அடிமை முறை ஒழிப்புத் தொடர்பான தனது நிலைப்பாட்டைக் குறிப்பிடுகையில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பாபேஜ் தனது எழுத்துக்களில் இனவாதத்தையும் அடிமை முறையையும் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.26 இது பொருத்தமற்றது அல்ல: அந்த நேரத்தில் ஒழிப்பு என்பது ஒரு முக்கியக் கண்ணோட்டமாக இருந்ததுடன் குறிப்பாக அவரது விஷயத்தில், "சுதந்திரமான" தொழிலாளர் முறை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு பயனளிக்கக் கூடியவை என்று நம்பிய தொழில்துறை முதலாளித்துவத்தின் நம்பிக்கையான பார்வையை விட விடுதலைக்கான அர்ப்பணிப்பு குறைவாக இருந்தது.27 தனது நைன்த் பிரிட்ஜ்வாட்டர் ட்ரீடைஸ் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் பாபேஜ் சேர்த்துள்ள ஒரு குறிப்பைத் தொடர்ந்து, இரண்டாவது நிகழ்வில் இங்கு நாம் கவனம் செலுத்துவோம்: ஒரு துண்டு (அற்புதங்கள் இருப்பதை கணித ரீதியாக அவர் நிரூபிக்க முயற்சிக்கிறார்). 1832 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கடற் படைத் தலைமைக்கு ஒரு கேப்டன் ஹேய்ஸால் அடிமை முறை ஒழிக்கப்பட்டது பற்றிய கேள்விக்கு அளித்த சாட்சியத்திலிருந்து எடுக்கப்பட்ட அடிமைத்தனத்தின் கொடுமையைப் பற்றி விவாதிக்கும் ஒரு பகுதியை இந்தக் குறிப்பு மேற்கோள் காட்டுகிறது.28 இந்த சாட்சியமே லண்டன் காலாண்டு மதிப்பாய்வின் டிசம்பர் 1835 பதிப்பில் தி ஃபாரின் ஸ்லேவ்-டிரேட் என்ற தலைப்பில் வெளியான ஒரு நீண்ட கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
இந்தக் கட்டுரையில் ஹேய்ஸின் சாட்சியத்தை விட அதிகமான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 1807 ஆம் ஆண்டில் பிரிட்டன் தனது அடிமை வர்த்தகத்தை ஒழித்ததால், உலகம் முழுவதும் அடிமை முறையை ஒழிப்பதற்கு நாடு பணியாற்றுவது தார்மீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இன்றியமையாதது என்ற வலுவான வாதத்தையும் இது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலைபாட்டை ஊக்குவிக்கும் கவலைகளில் முக்கியமானது, அடிமை முறையால் கிடைக்கக்கூடிய பலன்கள் தங்களுக்கு மட்டும் தடைபட்டு அதனால் "பிரிட்டிஷ் உற்பத்தி குறைந்து" தனது சர்வதேச ஆதிக்கத்தைத் தொடர்வதும் தடைபடுவதற்கான சாத்தியமிருப்பதாக பிரிட்டன் நினைத்ததாகும்.29 பாபேஜ் இந்தக் கட்டுரையை மேற்கோள்காட்டுவது, "தொழிலாளர் பிரச்சினை" தான் அடிமை முறை ஒழிப்பு பற்றிய விவாதங்களின் மையமாகும் என்பதை அவர் புரிந்துகொண்டதைத் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, கொடூரமான அடிமை முறை இல்லாத நிலையில், இலாபம் குறையாமல் மூலதனத்தை அதிகரிப்பதற்காக தொடர்ந்து உற்பத்தி செய்யும் வகையில் தொழிலாளர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்த முடியும் என்ற கேள்வியே முதன்மையானதாகும். நிக்கோலஸ் ஃபியோரி இந்த உரசலைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “முழுதும் வெள்ளையர்களால் நிரப்பப்பட்டத் தொழிற்சாலையில், உற்பத்தியையும் தொழிலார்கள் ஒழுக்கத்தையும் செம்மைப்படுத்துவதற்கு வேறு மாதிரியான கருவி தேவைப்பட்டது. அது, மனித உடலை (வெறுமனே) உற்பத்தி செய்யும் இயந்திரத்தின் மற்றொரு பாகமாகக் கருதி மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையே நிலைநாட்டப்பட்ட உறவைத் தக்க வைத்துக் கொண்டு தோட்டத்தில் வன்முறையைக் குறைத்தது.
கணினியில் தோட்டம்
பாபேஜின், தொழிற்சாலைத் தொழிலாளர் கட்டுப்பாடுக் கோட்பாடுகளை உருவாக்கும் பணியும் கணக்கீட்டு இயந்திரங்களை உருவாக்குவதற்காக வாழ்நாள் முழுவதும் ஆற்றியப் பணியும் ஒரே கேள்விக்கு பதிலளிப்பதற்கான இரண்டு அணுகுமுறைகளாக ஒன்றாக இணைத்துப் பார்க்கலாம்: முதலாளித்துவத்திற்கும் பிரிட்டிஷ் பேரரசிற்கும் சேவையாற்றும் பணியை எப்படித் தரப்படுத்தி ஒழுங்குபடுத்துவது என்பதேயாகும். நவீன கணக்கீட்டிற்கான வார்ப்புருவை உருவாக்கிய அவரது சிக்கலான இயந்திரங்களை30உருவாக்கும் முயற்சியில் தான், பாபேஜ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் உள்ள தொழிற்சாலைகளுக்கும் பட்டறைகளுக்கும் சென்று பார்த்தார். இந்த சுற்றுப்பயணங்களின் போது கவனித்தவை தான் ஆன் தி எகானமி ஆஃப் மெஷினரி அண்டு மனுஃபாக்சர்ஸ் நூலுக்கு அடித்தளமாக அமைந்தது.31பாபேஜ் தனது இயந்திரங்களை பேரரசின் கருவிகளாகக் கருதினார், எதிர்காலத்தில் பிரிட்டிஷ் கடற்படைக்கான வழிகாடும் அட்டவணைகளை உருவாக்குவதற்குப் பயன்படும் என்ற அடிப்படையில் அரசாங்கத்திடம் தாராளமான நிதியுதவியை அவர் கோருவதை நியாயப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில், தவறுகள் நிறைந்த வழிகாட்டும் அட்டவணைகள் பல கப்பல் விபத்துகளுக்கு வழிவகுத்தன,அத்தகைய வலிமையான கடற்படை பாதுகாத்த வர்த்தகத்தையும் பேரரசையும் பாதித்தது.
பாபேஜின் இயந்திரங்களுக்கும் தொழிலாளர் கட்டுப்பாடு பற்றிய அவரது கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ளவதற்கு, ஆட்டோமேஷன் பற்றிய அவரது பார்வையை நாம் முதலில் பார்க்கலாம். பாபேஜின் காலத்தில், "எஞ்சின்" என்ற சொல் "இயந்திரம்" என்பதற்கு இணையான சொல்லாக இருந்ததுடன் பாரம்பரியமான தொழிலாளர் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்துறை இயந்திரங்களின் பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. உழைப்புத் தன்னியக்கத்திற்கான பிற இயந்திர கருவிகளுடன் அவரது இயந்திரங்களும் இடம் பெற்றன, அவை அறிவு சார்ந்த (உடல் உழைப்பு அல்லாத) உழைப்பின் தன்னியக்கத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதால் வேறுபடுகின்றன. பாபேஜ், தனது இயந்திரங்கள் உட்பட ஆட்டோமேஷனும் உழைப்புப் பிரிவைச் சார்ந்தது என்று பொதுவாகப் புரிந்துகொண்டார்.32 அதன் செயல்முறைகளைச் செயல்படுத்துவதற்கு கருவிகளும் இயந்திரங்களும் பயன்படுவதை உழைப்புப் பிரிவு பரிந்துரைப்பதை அவர் கவனித்தார். சில எளிய கருவிகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு செயல்முறையும் செய்யப்பட்டால், ஒரு இயங்கு சக்தியால் உந்தப்படும் இந்த கருவிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு இயந்திரமாகிறது.33 பாபேஜைப் பொறுத்த வரையில், உழைப்பை தர்க்க ரீதியாப் பிரிப்பது, அதாவது ஒவ்வொரு பணியின் விவரக்குறிப்புகளையும் கவனிக்கக்கூடிய, அளவிடக்கூடிய மற்றும் "அதிகார மட்டத்திலிருந்து" கட்டுப்படுத்தக்கூடியது வேலை செயல்முறையை (மற்றும் அதைச் செய்பவர்களை) வழங்குவது, ஆட்டோமேஷன் செய்வதை இயலச் செய்வதற்கான நிலையாகும். எனவே, அறிவு சார்ந்த உழைப்பை தன்னியக்கமாக்குவதற்கு இயந்திரங்களை வடிவமைப்பதற்கு, பாபேஜ் முதலில் தொழிலாளர் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைப் பின்பற்ற (அல்லது உருவாக்க) வேண்டியிருந்தது.
பாபேஜ் தனது இயந்திரங்களின் இரண்டு முக்கியப் "பதிப்புகளை" உருவாக்கினார், ஒவ்வொன்றையும் பல முறை திரும்பத் திரும்ப மாற்றியமைத்து உருவாக்கினார்: "டிஃபெரன்ஸ் எஞ்சின்", னைத் தொடர்ந்து அவரும் அடா லவ்லேஸும் இணைந்து உருவாக்கிய "அனாலிடிகல் எஞ்சின்."34 பாபேஜ் தனது டிஃபெரன்ஸ் எஞ்சினை வடிவமைப்பதற்காக, முன்னணி சிவில் இன்ஜினியரான காஸ்பார்ட் டி ப்ரோனி, பிரான்சின் தொழிலாளர் பிரிவுக்காக உருவாக்கிய வார்ப்புருகளை எடுத்துக்கொண்டார். பாபேஜ் இந்த இயந்திரத்தை "டி ப்ரோனி'ஸ் சிஸ்டம் ஆஃப் மெக்கானிக்கல் அனலாக்" ஆகப் பார்த்தார்.35 கேடாஸ்ட்ரே. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான பிரெஞ்சு அரசாங்கத்தின் புரட்சிக்குப் பிந்தைய முயற்சியின் ஒரு பகுதியாக, டி ப்ரோனி பிரஞ்சு நிலப் பத்திரப் பதிப்புத் துறைக்கு ஒரு பெரிய சிக்கலான மடக்கை மற்றும் முக்கோணவியல் அட்டவணைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அவர் பணியை ஏற்றுக்கொண்டபோது, டி ப்ரோனிக்கு அதை எப்படிச் செய்வது என்பது பற்றி உறுதியாகத் தெரிந்திருக்கவில்லை - அதைச் செய்வதற்குப் போதுமான கணிதவியலாளர்களும் இல்லை. ஆனாலும் பணி தொடர்ந்தது, டி ப்ரோனிக்கு ஆடம் ஸ்மித்தின் வெல்த் ஆஃப் நேஷன்ஸின் நகல் கிடைத்தது, மேலும் அந்த உரையால் ஈர்க்கப்பட்டு, கணக்கீடு செய்யும் பணியில் வேலைப் பிரிவைப் பயன்படுத்தினார். அவர் மனிதக் "கணக்கீட்டாளர்களை" மூன்று படிநிலை நிலைகளாகப் பிரித்தார், அதில் "குறைந்த திறன்" கொண்ட மிகப்பெரிய நிலை அறுபது முதல் எண்பது எழுத்தர்களை உள்ளடக்கியதாக இருந்தது (அவர்களில் பலர் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்னர் பிரபுக்களுக்கு சிகையலங்கார நிபுணர்களாக இருந்து வேலை இழந்தவர்கள்).36 ஒரு சில "மிகவும் திறமையான" கணிதவியலாளர்கள் நடுவிலும் கீழ் மட்டத்திலும் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்குவதற்குப் பணியமர்த்தப்பட்டனர். பாபேஜின் டிஃபெரன்ஸ் எஞ்சின்கள் "குறைந்த திறமையான" கணிதவியலாளர்கள், அறுபது முதல் எண்பது முன்னாள் சிகையலங்கார நிபுணர்கள் ஆகியோரின் வேலைகளைத் தன்னியக்கமாக்குவதற்காகவே தொழிலாளர் பிரிவு மற்றும் கட்டுப்பாட்டு வார்ப்புருக்களைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டன.37
பாபேஜின் இரண்டாவது இயந்திரமான அனாலிட்டிகல் இன்ஜின் அடா லவ்லேஸுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டதாகும். நவீன கணக்கீட்டை நேரடியாக முன்வைத்து, மற்றொரு தொழில்துறை-சகாப்தத்தின் தொழிலாளர் பிரிவின் சிக்கலானக் கட்டமைப்புகளைச் சார்ந்திருந்த தொழிலாளர்-தானியங்கி சாதனத்திற்கு நன்றிக் கடன்பட்டதாக இருந்தது: ஜாக்கார்ட் லூம். பழைய பொறிமுறை-தறி வடிவமைப்புகளின் பரிணாம வளர்ச்சி, சிக்கலான நெசவு முறைகளை சீரானதாக்கவும் அமலாக்கவும் பஞ்ச் கார்டுகளை எந்திரம் பயன்படுத்திய அதே வேளையில், அதை கவனிக்கும் பணியில் தொழிலாளர்களைப் பணியமர்த்தவும் ஒழுங்குபடுத்தவும் செய்தது. (தனது பெயரையே தான் கண்டுபிடித்த இயந்திரத்திற்குப் பெயரிட்ட ஜாக்கார்ட், அவரது தறியால் வேலை இழந்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளர்களால் ஒருமுறை ஆற்றில் தூக்கி எறியப்பட்டார்.)38 தறியால் ஈர்க்கப்பட்ட பஞ்ச் கார்டுகள்தான், நிரலாக்கக்கூடிய அனாலிடிகல் எஞ்சின் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட "நிரலை" உருவாக்கியது.39 முந்தைய டிஃபெரன்ஸ் எஞ்சினுடன் ஒப்பிடும்போது அனாலிடிகல் எஞ்சினின் நன்மைகள், அவற்றின் முன்னோடிகளை விட அதிகமானப் பணிகளைச் செய்யும் (அல்லது தானியங்கும்) அதே நேரத்தில் அவற்றின் தொழிலாளர்களின் பணியை ஒழுங்குபடுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நன்மைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இத்தாலிய விஞ்ஞானி லூய்கி ஃபெடெரிகோ மெனாப்ரியாவின் அனாலிடிகல் எஞ்சின் பற்றிய விளக்கம் நமக்கு மிகவும் முழுமையான சமகால புரிதல் ஒன்றை வழங்குகிறது, இது டி ப்ரோனியின் மூன்றாவது நிலை மட்டுமன்றி இரண்டாம் நிலைக் கணிதத் தொழிலாளர்களுக்கு மாற்றாகும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறுகிறார்.40 "இயந்திரம் உருவாக்கப்பட்டவுடன்... சில எளிய குறிப்புகள் மூலம், அவற்றைச் செயல்படுத்துவதை ஒரு தொழிலாளிக்கு ஒப்படைப்பது எளிதாக இருக்கும்" என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். இது "தூரத்தில் இருந்து கொண்டே நிர்வாகம்" செய்வதை எளிதாக்குவதில் இயந்திரத்தின் பங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இயந்திரம் மேற்பார்வையாளர்களிடமிருந்து ("முதல் அடுக்கு") வழிமுறைகளைப் புரிந்து கொள்கிறது, மேலும் தொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிவதோடு மட்டுமல்லாமல், கீழ்ப்படிதலை அமலாக்குவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரத்தைப் பராமரிக்கவும் பணியமர்த்தப்படுகிரார்கள். "வேலைக்கான திறனைக் குறைப்பதில்" இயந்திரத்தின் பங்கும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: விவரக்குறிப்பு, நிரலாக்கப் பணியும் "அதிகார மட்டத்திலிருக்கும்" "திறமையான" தொழிலாளர்களால் செய்யப்படுவதுடன், இயந்திரத்தையே ஒரு தொழிலாளிக்கு "ஒப்படைக்கலாம்". அதற்கு எந்தவிதமான சிறப்பான அறிவு அல்லது "திறன்" இல்லாமல் அவர் சாதனங்களை எளிதாக மேற்பார்வையிட முடியும்.
பாபேஜின் இரண்டு இயந்திரங்களும் அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாபேஜின் வற்புறுத்தலின் காரணமாக, அவற்றின் வடிவமைப்பு சிக்கலானது பெருமளவில் அதிகரித்ததுடன் அவற்றின் செயலாக்க எளிமையும் குறைந்து, செயல்முறை முழுவதும் அவற்றின் கணக்கீட்டின் முடிவுகளை அச்சிட வேண்டும்.41அத்தகைய தனிச்சையான ஆவணங்கள் பிழை திருத்துவதற்கு எளிமையாக இருக்கிறது. ஆனால் இதுவும், சந்தேகத்திற்கு இடமின்றி, தொழிலாளரைக் கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையாகும், இயந்திரங்களை இயக்குவதற்கு பணியமர்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும் தவறிழைக்கக்கூடிய சாத்தியமானச் செயல்களையும் பதிவு செய்கிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல் பாபேஜின் நோக்கம் கண்காணிப்பது மட்டுமல்ல, கண்காணிப்பை தன்னியக்கமாக்குவதும் மற்ற இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. அவரது பல பொறிமுறைப் பங்களிப்புகளில் ஒன்று எர்லி டைம் கிளாக்கான "டெல்-டேல்" ஆகும். இது ஒரு தொழிலாளி பணிக்கு வந்திருப்பதை அல்லது வராமலிருப்பதைப் பதிவு செய்யும் வேலையைச் செய்கிறது, மேலும் "தொழிலாளி எதையாவது தவறவிட்டாரா என்பதை உரிமையாளருக்குத் தெரிவிக்கிறது."42
பாபேஜின் எழுத்தின் பெரும்பகுதி ஆட்டோமேஷனையும் இயந்திரமயமாக்கலையும் புகழ்ந்து பாடும் அதே வேளையில், அவர் குறிப்பிடும் "மனித முகவர்களின் கவனக்குறைவு, சும்மா இருக்கும் போக்கு அல்லது நேர்மையின்மைக்கு எதிராக" தன்னியக்கம் வழங்கும் ஒழுங்குமுறை சரிபார்ப்பு உள்ளிட்ட நன்மைகள் எப்பொழுதும் முதலாளிகளுக்கே கிடைக்கின்றன.43 ஆன் தி எகானமி ஆஃப் மெஷினரி அண்டு மனுஃபாக்சர்ஸ் நூலின் ஒரு அத்தியாயத்தில் சுருக்கமாக அத்தியாயத்தில், ஆட்டோமேஷனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தீமைகளை அவர் ஒப்புக்கொள்கிறார், அங்கும் தொழிலாளர்கள் அமைப்பாகத் திரள்வதை விமர்சிக்கிறார். தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும்போது, முதலாளிகள் அவநம்பிக்கை அடைகிறார்கள் என்றும், இந்த விரக்தியானது வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உழைப்பிற்கு மாற்றாக ஒன்றைக் கொண்டுவருவதற்கு அதிக ஊக்கத்தை அளிக்கிறது என்றும் அவர் வாதிடுகிறார். இத்தகைய சூழ்நிலைகளில், புதிய இயந்திர கண்டுபிடிப்புகள் உருவாகின்றன, அவை தொழிலாளர்களுக்கு மாற்றாக உதவுவதுடன் முதலாளிகள் ஆட்டோமேஷன் மூலம் வேலைநிறுத்தத்தை முறியடிக்கவும் அனுமதிக்கிறது. பாபேஜைப் பொறுத்தவரை, அது புத்தாக்கங்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதும் திரும்பப் பெறுவதும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்காது என்பதை இது நிரூபிக்கிறது.44ஆட்டோமேஷனின் ஒழுங்குமுறை செயல்பாடு, தொழிலாளர் பிரிவின் ஒழுங்குமுறை அம்சங்களைக் கட்டமைத்து விரிவுபடுத்தும் கட்டுப்பாட்டுக் கருவியாகயே ஆகும் என்பது பற்றிய பாபேஜின் விழிப்புணர்வு இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.
பாபேஜின் இயந்திரங்களின் கட்டமைப்புகள் அவரது தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவரது இயந்திரங்கள் தொழிலாளர்களை அவர் ஒழுங்குபடுத்த முயன்ற பல வழிமுறைகளில் ஒன்றாகச் செயல்பட்டன. மேலும் தொழில்துறை தொழிலாளர் ஒழுக்கம் என்ற அவரது பெரிய திட்டத்தின் அடித்தளமாக தோட்ட தர்க்கங்களும் தொழில்நுட்பங்களும் உள்ளன.
சுதந்திரத்தை மறுவரையறை செய்தல்
பாபேஜின் தொழிலாளர் கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளையும் கணக்கீட்டிற்கான அவரது கட்டமைப்புகளையும் இணைப்பது ஒரு ஒருங்கிணைந்த நோக்கமாகும்: பிரிட்டிஷ் பேரரசுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்யக்கூடிய "சுதந்திரமான" உழைப்பின் ஒழுக்கம். தொழிலாளர் கட்டுப்பாட்டிற்கான வார்ப்புருக்கள், கம்ப்யூட்டிங்கில் பாபேஜின் பங்களிப்பை வடிவமைத்தது, அதற்கு தோட்டத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் உந்துதலாக இருந்தது, அவை ஏற்கனவே தொழில்துறை தொழிற்சாலைகளில் கிளர்ச்சி செய்யும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காகத் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டன. கணக்கீடு, தோட்டத் தொழில்நுட்பம், தொழில்துறை தொழிலாளர் கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகள், நல்ல நோக்கங்களைக் கொண்டவர்களால் கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள் நேர்மறையான விளைவுகளை உருவாக்கும் என்று அனுமானித்துக் கொண்டு தற்போது ஆட்டோமேஷன் மற்றும் கணக்கீட்டு இயந்திரங்களை யார் கட்டுப்படுத்துவது என்பதற்கு அப்பாற்பட்ட கேள்விகளை எழுப்புகிறது. கணக்கீட்டின் முக்கிய தர்க்கங்களைக் கட்டமைக்கும் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, கணக்கீட்டுத் தொழில்நுட்பங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இயலச் செய்யும் சூழ்நிலைகளை கவனத்தில்கொண்டு நாம் மிகவும் அடிப்படையான விசாரணைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்-நமது தொடர்புகளுக்கும் நடைமுறைகளுக்கும் இடமளிக்கும் வகையில் கட்டமைக்கும் ஒரு கற்பனையான வெளி. பாபேஜின் இயந்திரங்களில் நாம் பார்ப்பது போல, இந்த வெளி, தொழிலாளர் பிரிவு, கண்காணிப்பு, "அதிகார மட்டத்திலிருந்து" கட்டுப்பாடு போன்ற தோட்டத் தொழில்நுட்பங்கள் இருப்பதை யூகிக்கிறது: பாபேஜின் இயந்திரங்கள் இந்த சூழல்களுக்குள் மட்டுமே "வேலை செய்கின்றன". கணக்கீடு மற்றும் தொழில்துறை தொழிலாளர் பிரிவுகளில் தொங்கிக்கொண்டிருக்கும் தோட்டத்தின் மாயத் தோற்றம், "சுதந்திரமான" தொழில்துறை தொழிலாளர் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்யவும் இந்தக் குறிப்பிட்ட வகையான "சுதந்திரத்தை" உருவாக்கி உத்தரவாதம் அளிதப் போட்டிச் செயல்முறையை அங்கீகரிக்கவும் வேண்டியதன் அவசியத்தையும் பேசுகிறது. அவ்வாறு செய்வதற்கு, "சுதந்திரமான" உழைப்பை அச்சுறுத்தி இனம், உழைப்பு மற்றும் கணக்கீட்டு தொழில்நுட்பங்களுக்கு இடையில் மூலோபாய ரீதியாக துண்டிக்கப்பட்ட தொடர்புகளை மீண்டும் உருவாக்கும் அறிகுறியின்றி நடைமுறையில் இருக்கும் கருப்பின அடிமை முறையை நாம் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். இத்தகைய பகுப்பாய்வு, மாற்றத்திற்கான உந்துதல்களை அடையாளம் காணவும் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பங்களின் முனைகளில் உள்ள சிக்கலகளைத் தீர்ப்பதிலிருந்து சுதந்திரத்தின் வகைகளை மறுவரையறை செய்வதற்கான உரிமையைக் கோரும் எதிர்காலத்தை வெளிப்படுத்துவதில் கவனத்தை மாற்றவும் உதவும் என்பது எனது நம்பிக்கை.